இந்த வருடம், சபலா ஏகாதசி தமிழ் மாதமாகிய கார்த்திகையின் தேய்பிறையில் வருகிறது. சபலா ஏகாதசி டிசம்பர் 13, புதன் கிழமை அன்று அமைகிறது. சபலா ஏகாதசி விரதமிருந்தால் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெறலாம்.அத்தகைய சிறப்பு வாய்ந்தது.
திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம்படி, சர்வ ஏகாதசி டிசம்பர் 14 வியாழன் அன்று வருகிறது.
பிரம்மாண்ட புராணத்தில், சபலா ஏகாதசி கதையை ஸ்ரீகிருஷ்ணர் தருமருக்கு எடுத்துரைக்கிறார். அப்போது அவர் சபலா ஏகாதசி விரத கதையை கேட்பவருக்கே ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறார்.
முன்பொரு காலத்தில், மஹிஸ்மதா என்றொரு மன்னர் சம்பவதி என்ற ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். மூத்தவன் லும்பகா மிகவும் கொடியவனாக இருந்தான். அவன் இரக்கமற்ற காரியங்களில் ஈடுபட்டான். விபச்சாரம் போன்ற செயல்களில் ஈடுபட்டான்.
தேவர்களையும், கடவுளரையும், அந்தணர்களையும், வைஷ்ணவர்களையும் நிந்தித்தான். அவனால் நாட்டில் செல்வம் குறைந்தது. மன்னர் அவனது கொடுமைகளைப் பொறுக்க முடியாமல், அவனை நாட்டை விட்டு விலக்கி வைத்தார்.
லும்பகா தனது நாட்டிற்கு அருகில் இருந்த கானகத்தில் வசித்து வந்தான். அவன் விலங்குகளை வேட்டையாடி அவற்றை உணவாக உண்டான். அவற்றோடு பழங்களையும் உண்டான். இரவு நேரத்தில் தனது நாட்டிற்குள் சென்று மக்களின் விலை மதிப்புள்ள பொருட்களை திருடினான். மக்கள் அவனை அடையாளம் கண்டு கொண்டாலும், மன்னனிடம் இருந்த பயத்தால் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை.
இப்படியே காலம் சென்றது. லும்பகா ஒரு ஆலமரத்தடியில் தான் தங்கி இருந்தான். ஆல மரம் விஷ்ணுவிற்கு உகந்தது. சபலா ஏகாதசி வந்தது. அன்றைய தினத்திற்கு முதல் நாளாகிய தசமி அன்று லும்பகா மிகவும் களைப்புற்று இருந்தான். குளிர் அவனை வாட்டி வதைத்தது. போர்த்திக் கொள்ள சரியான கம்பளமும் இல்லை.
களைப்போடு உறங்கிய லும்பகா மறு நாள் நண்பகலில்தான் (ஏகாதசி அன்று) கண் விழித்தான். பசியோடு இருந்த அவன் சோர்வு காரணமாக வேட்டையாடவில்லை. கையில் கிடைத்த பழங்களை உண்டான். அதில் சில பழங்களை எடுத்து ஸ்ரீ ஹரிக்கு அர்ப்பித்தான். விஷ்ணுவை மனதில் வேண்டி இவ்வாறு கூறினான்:
“எல்லாம் வல்ல பிரபுவே! இந்த பழங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் தெய்வமே! நிர்கதியான என் மேல் கருணை காட்டுங்கள்.”
லும்பகா அந்த இரவும் குளிர் காரணமாக கண் முழித்திருந்தான்.
லும்பகா சபலா ஏகாதசி விரதத்தை தன்னை அறியாமலே கடைப்பிடித்தான்.பலனாக மறுநாள் அவன் கண் விழித்த போது, அவன் அருகில் ஒரு குதிரை இருந்தது. வானிலிருந்து ஒரு அசரீரியும் எழுந்தது:
"லும்பகா! நீ உன்னை அறியாமல் சபலா ஏகாதசி விரதமிருந்ததால் உனக்கு ஏகாதசி விரத பலன் கிடைத்து உள்ளது. ஸ்ரீஹரி உன் விரதத்தால் மகிழ்ச்சி அடைந்தார். பலனாக உனது ராஜ்ஜியம் உனக்கு மீண்டும் கிடைக்கும். இந்த குதிரையில் ஏறி நீ உனது ராஜ்ஜியத்திற்குத் திரும்ப செல்!”
லும்பகாவும் தனது நாடு திரும்பினான். திருந்திய மகனாக வீடு திரும்பிய லும்பகாவைக் கண்டு மன்னர் மகிழ்ந்தார். லும்பகாவிற்கு திருமணம் நடந்து நல்ல புதல்வனும் கிடைத்தான். பக்தி மிக்க வைஷ்ணவனாகத் திகழ்ந்த லும்பகா எல்லா ஏகாதசி விரதங்களையும் கடைப்பிடித்து, மகாவிஷ்ணுவின் அருளுக்கு பாத்திரமானான்.
அவனது தந்தை முதுமை அடைந்தவுடன் ராஜ்ஜியத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு காடு ஏகி தவம் செய்து இறைவனடி சேர்ந்தார். அதே போல் லும்பகாவும், தனது வயதான காலத்தில், நாட்டின் பொறுப்பை தனது மகனிடம் ஒப்படைத்து விட்டு, கானகம் சென்றார். அங்கே தவ வாழ்வு வாழ்ந்து வைகுண்டம் சென்றார்.
லும்பகா தன்னை அறியாமலேயே சபலா ஏகாதசி விரதமிருந்ததற்கு அவருக்கு ராஜ்ஜிய பதவி கிட்டியுள்ளதே? நாமெல்லாம் அறிந்து விரதமிருந்தால் நமக்குப் பலன் ஏராளமன்றோ?
சபலா ஏகாதசி விரதமிருப்போருக்கு பாப விமோசனம் ஏற்பட்டு, முக்தி கிடைக்கும்.
இழந்த ராஜ்ஜியம் கிட்டும்.
இந்த ஏகாதசி விரதமிருந்தால் நம்மை வாட்டும் கவலைகள் நீங்கும்.
சபலா ஏகாதசி கதையைக் கேட்போருக்கு ராஜசூய யாகம் செய்த பலன் கிட்டும்.அடுத்த பிறவியில் சொர்க்கம் கிட்டும்.
சபலா ஏகாதசி அன்று வணங்க வேண்டிய கடவுள் நாராயணன் ஆவார்.
மலர்,வெற்றிலை பாக்கு,தேங்காய் பழங்கள்,மாதுளம் பழம் ஆகியவற்றை நாராயணனுக்கு அர்ப்பிப்பது விசேஷம்.
ஊதுபத்தியுடன்,நெய் விளக்கும் ஏற்ற வேண்டும்.நெய் விளக்கு ஏற்றுவது நன்மையைத் தரும்.
நாள் முழுக்க விரதமிருந்து,இரவு கண் விழித்து நாராயணனைத் துதித்தால் அவரின் அளவில்லா கருணையைப் பெறலாம்.
சபலா ஏகாதசி விரதமிருந்து நாராயணனின் அருள் பெற்று வைகுண்டம் அடைய வழி தேடுவோமாக!
மேலும் படிக்க
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply