மகாசிவராத்திரி எம்பெருமான் சிவனுக்கே மிகவும் பிடித்த தினமாகும். அன்னை பார்வதியிடம் அவரே ஒப்புக் கொண்ட செய்தி இது. தாண்டவகோனாம் நடராசன் அறியாமை என்னும் இருட்டை நீக்கி ஆன்மீக ஒளியை அளிக்கும் கருத்தைக் கொண்டாடுவதே மகாசிவராத்திரியின் மகிமை.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி மாத சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. பகலும் இரவுமாக விரதம் இருந்து நம் பாபங்களை தொலைத்து ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் விரதமிது.
முன்பு ஒரு காலத்தில் விறகுவெட்டி ஒருவன் காட்டில் சென்று இரவில் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டான். ஒரு மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். கொடிய மிருகங்களை நினைத்து பயந்த அவன் தூங்காமல் இருப்பதற்காக, மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக கீழே எறிந்தான். அவன் அமர்ந்தது வில்வ மரத்தின் மேல். கீழே வில்வ இலைகளை எறிந்ததோ சிவலிங்கத்தின் மேல். இதை விட அவனுக்கு வேறு என்ன பேறு வேண்டும். அறியாமலே வில்வ மரத்தின் மேல் அமர்ந்து வில்வ இலைகளைக் கொண்டு சிவனை இரவு முழுவதும் தூங்காமல் பூஜித்ததால் அவன் பூஜித்த இரவைக் கொண்டாடும் வகையில் மகா சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. விறகு வெட்டியைப் போல் நமக்கும் இறை அருள் முழுமையாகக் கிடைக்க மகாசிவராத்திரி உதவுகிறது.
மகா சிவராத்திரி அன்று சிவ-சதியின் திருமணம் நடந்ததாக புராணம் கூறுகிறது. சதி பார்வதி அவதாரமெடுத்து இமயமலையில் தவமிருந்து சிவனின் கரம் பற்றிய தினம் இது.
பாற்கடலை அசுரரும் தேவரும் கடையும் போது எழுந்த விஷத்தை நீலகண்டர் உண்டு தனது கண்டத்தில் தேக்கிக் கொண்ட தினமாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நாளில் ஆதியும் அந்தமும் இல்லாத எம்பெருமான் பெரும் தீப் பிழம்பாக நாராயணன் மற்றும் பிரமனின் முன் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது
மகா சிவராத்திரி அன்று அதிகாலை நீராடி, சிவ நாமங்களை உச்சரித்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.கோயில் சென்று சிவனை தொழுபவர் பலர். சிவ ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்பவரும் உண்டு. ஜ்யோதிர் லிங்கங்கள் உள்ள புண்ணிய இடங்களுக்கு செல்பவர் பலர்.
மகா சிவராத்திரி விரதமிருப்பவர்கள் காலையிலிருந்து மறுநாள் காலை வரை விரதமிருப்பார்கள். தண்ணீர் கூட அருந்தாதவர்களும் உண்டு. மறு நாள் சிவ தரிசனம் செய்து பிரசாதத்தை ஏற்று விரதத்தை முடிப்பார்கள். முடியாதவர்கள் பால் பழம் உண்ணுவது உண்டு. இரவிலும் முழித்து இருப்பதே இந்த விரதத்தின் பெருமை. சிவ புராணங்களைப் படித்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இரவை இறை சிந்தனயில் கழித்து சிவ தரிசனம் காண்பது ஆன்மீக வாழ்விற்கு வளம் தருவதாகும்.
இரவில் கோவில்களில் நாலு கட்ட அபிஷேகம் நடை பெறுவது சிவராத்திரியின் சிறப்பாகும். ஒவ்வொரு காலத்திலும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.அந்த அபிஷேகத்திற்கு தேவையான பால், தேன், பழம்ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு சென்று இறைவனை வழிபடுவது சாலச் சிறந்தது. நாலு காலமும் பார்க்க முடிந்தால் விசேஷம். இப்படியாக சிவ ஆராதனையில் மகாசிவராத்திரியை கழித்தால் நம் துன்பமெல்லாம் பறந்தோடும் என்பது உறுதி
இந்த விரதமிருந்தால் நம் பாபங்கள் தொலையும். வீடுபேறு கிட்டும். மறு பிறவி கிடையாது. சிவன் ஆன்மீக ஒளியாய் நாராயணனுக்கும் பிரம்மனுக்கும் முன் தோன்றியவர் என்பதால் அவரை இந்த இரவில் தொழுதால் ஆன்மீக ஒளி கிட்டும். மற்றும் நமது மனத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
பகலிலும் இரவிலும் விரதமிருப்பதால் நமது ரஜஸ் தமஸ் குணாதிசயங்களை கட்டுப்படுத்த முடியும். ரஜஸ் குணம் நமது தீய எண்ணங்களை காட்டுகிறது. விரதமிருந்து மனத்தை ஒருமுகப்படுத்துவதால் ரஜஸ் குணத்தை கட்டுப்படுத்த முடியும். தமஸ் என்பது நமது செயலின்மையைக் குறிக்கிறது. உறங்கும் நேரத்தில் நாம் செயலிழந்தவர்களே. இரவில் முழித்து இறை சிந்தனயில் ஆழும் போது நமக்கு செயல் திறன் கிடைக்கிறது. செயலின்மை இல்லை.
மகா சிவராத்திரி இந்தியாவிலும் நேபாளத்திலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேபாளத்தின் பசுபதிநாதர் கோயில், காசியின் விஸ்வநாதர் கோயில், மற்றும் தென் இந்தியாவின் பழமையான கோயில்களில் மகா சிவராத்திரி உத்சவம் அருமையாகக் கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி விரதமிருந்து சிவனை துதித்து கொண்டாடி மகிழ்ந்து இறைஅருள் பெற்று நன்மை அடைவோமாக.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply