மோக்ஷதா ஏகாதசி கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி ஆகும். இந்த வருடம் மோக்ஷதா ஏகாதசி, நவம்பர் 29, புதன்கிழமை வருகிறது.
வைஷ்ணவ மோக்ஷதா ஏகாதசி நவம்பர் 3௦, வியாழக்கிழமை வருகிறது.
மோக்ஷதா ஏகாதசி தினத்தில் கீதா ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில்தான் கிருஷ்ணர், அர்ஜுனருக்கு கீதையை குருக்ஷேத்திர பூமியில் உபதேசித்தார். அதனைக் கொண்டாடும் முகமாக இந்த நாளில் கீதா ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. எனவே மோக்ஷதா ஏகாதசி இரு வகையில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
மோக்ஷதா ஏகாதசியின் பெருமையை ஸ்ரீ கிருஷ்ணர் தருமருக்கு பிரம்மாண்ட புராணத்தில் எடுத்துக் கூறி உள்ளார். இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் ஒருவர் தனது பாபங்களிலிருந்து விடுபடுவதிலிருந்து, தனது முன்னோர்களின் பாபங்களையும் போக்கி, அவர்களை நரகத்திலிருந்து விடுவிக்கலாம்.
முன்பொரு காலத்தில் சம்பகாபுரம் என்றொரு நகரம் இருந்தது. அதனை வைகானசா என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் சிறப்பான முறையில் தனது ராஜ்ஜியத்தை அரசாண்டு வந்தான். அவனது மக்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். அவனது ராஜ்ஜியத்தில் நான்கு வேதங்களையும் கற்றறிந்த பண்டிதர்கள் வாழ்ந்தார்கள். அரசன் தனது பிரஜைகளை தனது குழந்தைகளாகக் கருதினான்.
ஒரு நாள், அரசன் ஒரு கனவு கண்டான். அதில் தனது தந்தை நரகத்தில் எமன் கொடுக்கும் தண்டனைகளால் அவதிப்படுவதைக் கண்டான். அவனது மனதின் அமைதி குன்றியது. நிம்மதி இழந்த மன்னன் இந்த நிலைமையிலிருந்து மீள வழி தேடினான். தனது ராஜ்ஜியத்தில் வாழும் அந்தணர்களை அழைத்து தனது மனக் குறையைக் கூறினான். அவர்கள் மன்னனிடம் மூன்று காலங்களும் அறிந்த பர்வத முனிவரைச் சென்று தரிசித்தால் வழி கிடைக்குமெனச் சொன்னார்கள். அவராலேயே மன்னனின் மனக்கவலையைப் போக்க முடியும் எனக் கூறினார்கள்.
மன்னன் பர்வத முனிவரை தரிசிக்கச் சென்றான். பர்வத முனிவர் நான்கு வேதங்களையும் ஓதிக் கொண்டிருந்த அந்தணர்களின் நடுவில் தேஜசோடு அமர்ந்திருந்தார். முனிவர் அருகில் வந்து பணிந்த மன்னனின் க்ஷேம லாபம் பற்றி விசாரித்தார். மன்னன் அவரிடம்,
“முனிவர் பெருமானே! என் ராஜியத்தில் எல்லாம் சீராக உள்ளது. ஆனால் எனக்கு சில நாட்களாக ஒரு மனக் குறை உள்ளது. அண்மையில் நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில், என் தந்தை எமனின் பிடியில் அகப்பட்டு, நரகத்தில் வேதனைகளை அனுபவிப்பதைக் கண்டேன். என் மனம் நிம்மதி இன்றி தத்தளிக்கிறது. இந்த நிலையிலிருந்து விடுபட நீங்களே ஒரு வழி சொல்ல வேண்டும்.” எனக் கூறினான்.
மன்னனின் குறையைச் செவிமடுத்த முனிவர் தனது ஞான திருஷ்டியால் மன்னனின் தந்தை செய்த தவறைப் புரிந்து கொண்டார். மன்னனின் தந்தை செய்த தவறு என்னவென்றால் அவரது வாழ்வில், அவர் தனது மனைவியுடன் சண்டை போட்டதுமல்லாமல் அவளது மாத விடாய் நேரத்தில் அவளது மறுப்பையும் மீறி அவளை அனுபவித்தார். இந்த பாபத்திற்கு நரகத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டு உள்ளார்.
தனது தந்தையின் வேதனைக்குக் காரணம் அறிந்த மன்னன் அதனைப் போக்க வழி வேண்டினான். பர்வத முனிவர் மன்னனை மோக்ஷதா ஏகாதசி விரதமிருக்கப் பணித்தார். இந்த விரதமிருந்தால் மன்னன் தனது தந்தையை நரகத்திலிருந்து விடுவிக்கலாம் என்று கூறினார்.
வைகானசா மன்னன் அவ்வண்ணமே மோக்ஷதா ஏகாதசி விரதமிருந்தான். அவனோடு அவனது குடும்பமும், பணியாளர்களும், பிரஜைகளும் மோக்ஷதா ஏகாதசியை அனுசரித்தார்கள். அந்த விரத பலனால் மன்னனின் தந்தை நரகத்திலிருந்து விடுபட்டு சுவர்க்கம் சென்றார். இந்த விரத பலனால் விளைந்த புண்ணியத்தைக் கொண்டு விஷ்ணுவை வழிபட்டு வைகுண்டம் சென்றார்.
மோக்ஷதா ஏகாதசி விரதமிருப்பவர் குதிரை தானம் செய்பவரை விட அதிகப் பலன் பெறுகிறார்.
அவர் தனது வாழ்வில் செய்த பாபங்களிருந்து விடுபடுவதோடு அல்லாமல் தனது மூதாதையரின் பாபங்களையும் போக்கி, அவர்களை நரகத்திலிருந்து விடுவித்து சுவர்க்கத்திற்கு அனுப்புகிறார்.
மோக்ஷதா ஏகாதசி அன்று தாமோதரக் கடவுளை வணங்க வேண்டும்.
விஷ்ணுவை மலர், பழம், துளசி இலை, தூபம் கொண்டு பூஜிக்க வேண்டும்.
இன்று முழு விரதமிருப்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு.
மோக்ஷதா ஏகாதசி அன்று கீதா ஜெயந்தியும் கொண்டாடுவதால் இன்றைய தினம் பகவத் கீதை புத்தகத்தை தானம் கொடுத்தால் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளை ஏராளமாகப் பெறலாம்.
மோக்ஷதா ஏகாதசி விரதமிருந்து பகவான் விஷ்ணுவின் அருளோடு பாபங்களைத் தொலைப்போமாக!
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply