ராமானுஜர் தெற்கு இந்தியாவில் பிறந்து வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு வேரான பக்தி சம்பிரதாயத்தை நிறுவியவர். சிறந்த வேதாந்த கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லி இந்து மதம் தழைக்க உதவியவர். விசிஷ்டாத்வைதத்தை கொண்டு வந்தவர். பகவான் விஷ்ணுவை முதற் கடவுளாக வணங்கியவர். அதனையே பக்தி மார்கமாக மக்களிடையே எடுத்து சென்றவர்.
இத்தகைய பெருந்தகையின் பிறந்த தினமே ராமானுஜர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சித்திரை மாதம் வளர்பிறை, திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மே மாதம் 1ம் தேதி ராமானுஜ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ராமனுஜரின் 1000மாவது வருட ஜெயந்தியாக அமைகிறது.
ராமானுஜர் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் 1017ம் வருடம் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இளைய பெருமாள் என அழைக்கப்பட்டவர்.
திருமணத்திற்கு பின் காஞ்சிபுரம் சென்ற ராமானுஜர் வேதாந்தத்தை பயில ஆரம்பித்தார். தனது குருவான யாதவ் பிரகாசரின் அத்வைத கொள்கைகளை ஏற்காமல் ஆழ்வார்களின் பக்தி மார்கத்தை தழுவினார். விஷ்ணுவை முதல் கடவுளாகக் கொண்டு பக்தியின் மூலம் முக்தியை தேடும் வழியினை பின்பற்றினார். இதற்கு முன்னோடியாக நாதமுனி ஆழ்வாரையும் யமுனாச்சாரியாரையும் ஏற்றுக் கொண்டார்.
ராமானுஜர் சோழர் காலத்தில் வாழ்ந்தவர். அப்போது சைவம், ஸ்மார்த்தம், வைஷ்ணவம், புத்த மற்றும் சமண சமயம் பரவி இருந்தன. நாடெங்கும் உலா மேற்கொண்ட ராமானுஜர் பக்தி மார்கத்தை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டார். காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டராக இருந்த நேரம் விஷ்ணு பக்தியினால் முக்தி தேட மக்களுக்கு எடுத்துரைத்தார். பல இடங்களிலும் பெருமாளை தொழ இடங்களை அமைத்தார். 1137ம் ஆண்டு 120 வருடங்கள் வாழ்ந்த பின் ஸ்ரீரங்கத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அத்வைத சித்தாந்தம் சங்கரரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆத்மனும் பரமனும் ஒன்றே என்னும் தத்துவம் கொண்டது. ராமானுஜர் இதற்கு மாறாக விசிஷிட்டாத்வைத சித்தாந்தத்தை தோற்றுவித்தார். அதன் படி ஆத்மனும் பிரமமும் வேறு வேறு. ஆனால் ஆத்மனால் பிரமத்தை உணர முடியும். இதற்கு சகுண உபாசனையே சரியானது. அதாவது எந்த ஒரு மூர்த்தி வழிபாடு மூலமாகவோ நாம் பக்தியின் உச்சத்தை எட்ட முடியும். அப்போது முக்தி நெறி அடைய முடியும். இதற்கு விஷ்ணு வழிபாடே உகந்தது. இதுவே ராமானுஜரின் தத்துவம். இது மத்வாச்சார்யரின் த்வைத சித்தாந்தத்தில் இருந்தும் வேறுபட்டது.
ராமானுஜர் சிறந்த நூலாசிரியரும் கூட.வேதத்திற்கு உரையாக வேதார்த்த சாம்க்ரஹா, பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம்,பகவத் கீதைக்கு பாஷ்யம் எழுதியவர். உபநிடதங்களுக்கு சங்கரரின் கருத்துகளில் இருந்து மாறுபட்ட விளக்க உரைகள் வழங்கினார். அவரது கருத்துகளின் ஆழம் வேதாந்த விசாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கிடையில் பெரும் மதிப்பை பெற்றுள்ளது.
ராமானுஜர்ஜெயந்தி அன்று அவரது உத்சவ மூர்த்தியை அபிஷேகம் செய்து அவருக்கு விசேஷ பூஜை நடத்துவது வழக்கம். மற்றும் உபநிடதங்களை உச்சரித்து அவரை தொழுவார்கள். கோவிலை ஒரு முறை சுற்றி ராமனுஜரின் ஆசியை அடைவார்கள்
இதே நாளில்தான் ஸூர்தாஸரின் ஜெயந்தியும் வருகிறது. வட நாட்டு கவிஸூர்தாஸ் கண்ணனை ஒரு குழந்தையாக பாவித்தவர். அவனின் பால்ய லீலைகளை ஒரு தாயின் பாவத்தோடு உணர்ந்து அதனை பாடல்களாகவும், பஜனைகளாகவும் எழுதியவர். அவரின் ஸுர சாகர் என்னும் புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.
பிறவி குருடரான ஸுர்தாஸ் தனது ஆறாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். கனவில் கண்ணனை கண்டு அவரின் ஆணைப்படி பிருந்தாவனம் சென்றார். அங்கே கண்ணனின் பக்தரான வல்லபாசார்யரை சந்தித்து அவரிடம் மத நூல்களை பற்றி அறிந்து கொண்டார். அக்பரின் அன்புக்கு பாத்திரமான அவர் தனது பாடல்களை மதித்து பணம் வழங்கியோரின் தயவில் வாழ்ந்தார்.
இருவரும் பக்தி மார்கத்தை தேர்ந்தெடுத்தவர்கள்.ராமானுஜர் பக்தியை அறிவு பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றார். ஸுர்தாஸரோ உணர்வுகளின் அடிப்படையில் கண்ணனை தேடினார். இருவரும் முக்தி வழி தேடியவரே.
அருமை மிகுந்த ராமானுஜரை போற்றி பணிந்து நாமும் பக்தி வழியாக வீடு பேறை அடைவோமாக.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply