ஹனுமான் ஜெயந்தி | Ama Vedic Services
டிசம்பர் 16, 2017 09:01 முப

ஹனுமான் ஜெயந்தி

அஞ்சிலே ஒன்று பெற்றான்

                  அஞ்சிலே ஒன்றை தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக

                ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே  ஒன்று பெற்ற

              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான்

              அவன்  நம்மை அளித்து காப்பான் ( கம்ப ராமாயணம்).

 

வாயு குமாரனாம் ஆஞ்சநேயர் நினைத்ததை முடிக்க வல்லவர். கடல் தாண்டி அன்னை ஜானகியை ஸ்ரீராமனிடம் சேர்த்தவர். பலசாலி, புத்திசாலி மற்றும் நம் சங்கடங்களை போக்கவல்ல சக்தி படைத்தவர்.

 

மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தில் வரும் நாள் ஹனுமானின் பிறந்த தினமாகும். அந்த நாள் மார்கழி அமாவாஸ்யை ஆகவும் அமைகிறது. இந்த தினத்தை ஹனுமான் ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் ஹனுமான் ஜெயந்தி டிசம்பர் 17ம் தேதி வருகிறது.

 

ஆஞ்சநேயரின் ஆற்றல்

 

வாயுவின் சக்தி பெற்று கடல்,மலை என எந்த ஒரு தொலைவையும் தாண்டக் கூடியவர் ஹனுமான். தன் உருவத்தை சுருக்கியும், விரித்தும் அவர் ஆற்றிய லீலைகள் ராம கதையில் நம்மை வியக்க செய்தவையே. ஒரு சாபத்தால் தன் சக்தியை தானே மறந்து இருக்கும் ஆஞ்சநேயருக்கு அதை ஜாம்பவான் நினைவு படுத்தி அவரை கடல் தாண்டத் தூண்டியது நாம் அறிந்த ஒன்று.

 

கேசரிநந்தன் எனப் பெயர் வரக் காரணம்

 

அஞ்சனையின், கேசரியின் பிள்ளையாக சிவ அருள் பெற்று பிறந்தமையால் ஹனுமான் சிவம்சமாகக் கருதப்படுபவர். ஆஞ்சநேயன் என அன்னையின் பெயரை ஒட்டியும், கேசரிநந்தன் என்று தந்தையின் பெயரை ஒட்டியும் பெயர் பெற்றவர். வாயுவின் புத்திரனாகவும் இருப்பதால் மாருதி எனவும் அழைக்கப்படுபவர்.

 

ராம பக்தர்களிற்கு எடுத்துக்காட்டு ஆஞ்சநேயர்

 

ராமனை  தன் மார்பில் சுமந்து கொண்டு இருக்கும்  ஆஞ்சநேயர்.சஞ்ஜீவி மலை கொண்டு வந்து இந்திரஜித்தின் நாகாஸ்த்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட   லக்ஷ்மணனின் மூர்ச்சை தெளிவித்தவர்.ராமனுக்காக இலங்கையை தீக்கிரையாக்கி ,அன்னை சீதாவின் சூடாமணியை ராமனிடம் சேர்ப்பித்தவர்.  ராமாயணத்தில் சுந்தர காண்டம் இதனை விளக்குகிறது.எனவேதான் சுந்தர காண்ட பாராயணம் நமது துன்பங்களை விலக்குகிறது.

 

ராம கதையோடு பின்னிப் பிணைந்த ஹனுமான்

 

ராம காவியத்தில் ஒரு பெரும் பங்கு வகிக்கும் கதாபாத்திரம் ஹனுமான். ராமாயணத்தில் அவரின் சாகசங்களுக்கு அளவில்லை.மேற்கூறிய சஞ்சீவி மலை நிகழ்ச்சி இதற்கு ஒரு உதாரணம். இன்றும் ராமகதை நடக்கும் இடந்தோறும் கை கூப்பி ராம ஜெபத்தில் ஈடுபடும் சிரஞ்சீவி.

 

இது மட்டுமல்ல.சிறு வயதில் சூரியனைப் பழம் என நினைத்து அதனை அஞ்சனை மைந்தன் வாயில் அடக்கிக் கொண்டது நாம் வியந்து படித்த நிகழ்ச்சிதானே?

 

ஹனுமான் ஜெயந்தி கொண்டாட்டங்கள்

 

தமிழர் மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தில் வரும் நாளை ஹனுமானின் பிறந்த தினமாக கொண்டாடுகிறார்கள்.அந்த நாள் மார்கழி அமாவாஸ்யை ஆகவும் அமைகிறது. அதி காலையில் இருந்து  ஆஞ்சநேய துதிகள் கோவில்களில் முழங்குகின்றன.

 

வட இந்தியாவில் கொண்டாடும் விதம்

 

வடஇந்தியாவில் சைத்ர மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோயில் சென்று ஆஞ்சநேயரின் சிந்தூரத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

 

ஆஞ்சநேயர் உடல் முழுவதும் சிந்தூரம் பூசப்பட்டு இருப்பது நமக்கு தெரிந்த ஒன்று.அன்னை சீதா தன் நெற்றியில் ராமரின் நலனுக்காக சிந்தூரம் வைப்பதைக் கண்ட ஹனுமான் தன் உடல் முழுவதும் ராமன் நலம் கருதி சிந்தூரம் பூசிக் கொண்டாராம்.

 

ஆஞ்சநேயரின் பிறப்பு கூறும் செய்தி

 

ஆஞ்சநேயரின் பிறப்பு நம் மனதின் செயல்பாடுகளை குறிப்பதாக அமைகிறது.நம் மனதின் சிந்தனைகள் ஒரு  குரங்கின் செயல்களுக்கு ஒப்பானவை.’மனித மனம் ஒரு குரங்கு’ என்றான் ஒரு கவிஞன். மனதை அடக்கி ஆளவில்லை என்றால் அது தன்னிச்சையாக செயல்படும்.பல இன்னல்களை விளைவிக்கும்.எப்படி ஆஞ்சநேயர் தன் பிறப்பு தாண்டி,பராக்ரமங்கள் புரிந்து,ராம பக்தியில் கலந்து உள்ளாரோ ,அது போல் நாமும் நம் மனதை அடக்கி,ஆன்மீக ஞானம் பெற்று இறைவனிடம் இரண்டற கலக்க வேண்டும் என்பதே செய்தி.

 

ஹனுமான் ஜெயந்தி அன்று துளசிதாசரின் ஹனுமான் சாலீஸாவை பாடுவது ஆஞ்சநேயர் துதிக்கு உன்னதம் சேர்க்கும். அதை தினந்தோறும் பாராயணம் செய்ய சகல சங்கடங்களும் விரைந்தோடும். துளசிதாசரின் ஹனுமான் சாலிஸா ஆஞ்சநேயரின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது.

 

இந்த ஹனுமான் ஜெயந்தி வாழ்வில்,துணிச்சலையும்,சந்தோஷத்தையும்,நிம்மதியையும்,உற்சாகத்தையும் அளிக்கட்டும்.

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    12 + 7 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

    சிறப்பு காணொளி

    வானிலை

    Chennai

    Currently, there is no weather information available.

    Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK